தர்மபுரி, செப்.11: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா அறிவுறுத்தலின் பேரில், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரண்குமார் மற்றும் திருப்பதி மற்றும் டவுன் போலீசார் சுரேஷ் மற்றும் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பிடமனேரி, சந்தைப்பேட்டை, நேதாஜி பைபாஸ் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வெண்ணாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், ஒரு பீடா கடையில் இருந்து, தடை செய்யப்பட்ட ₹1500 மதிப்புள்ள ஒரு கிலோ அளவிற்கு குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்து, ₹25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.