சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த 3 நாட்களில் கஞ்சாவுக்கு எதிரான வேட்டையில் கஞ்சா வியாபாரிகள், 58 ரவுடிகள் உள்பட 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறி போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் போதை தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் தலைமையில் சிறப்பு பிரிவு ஒன்று தொடங்கியுள்ளார். இந்த சிறப்பு பிரிவினர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் கும்பலை மட்டும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்கள் மற்ற பணிகளில் ஈடுபட மாட்டார்கள். புதிதாக தொடங்கப்பட்ட போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் அருண் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் ேததி வரையிலான 3 நாட்களில் ‘போதை தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். அதில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் முற்றும் விற்பனை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த அதிரடி நடவடிக்கையில் 3 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தியதாக தனித்தனியாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கஞ்சா வியாபாரிகள் உள்பட 334 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 58 பேர் ரவுடிகள். போலீசாரின் தடையை மீறி சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.