பஹ்ரைச்: உத்தரபிரதேசத்தை அச்சுறுத்தி வரும் ஆள்கொல்லி ஓநாய்களில் 5வது ஓநாய் நேற்று பிடிபட்டது. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஓநாய்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பஹ்ரைச் நகரை சுற்றியுள்ள 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் ஓநாய்கள் நடமாடுவதாக கூறப்படுகிறது. இந்த மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் 8 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 9 பேர் ஓநாய் கடித்து உயிரிழந்து விட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பொதுமக்களை கொன்று வரும் ஓநாய்களை கண்டதும் சுட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் ஆள்கொல்லி ஓநாய்களை பிடிக்க ஆபரேஷன் பேடியா என்ற தேடுதல் வேட்டை ஏற்படுத்தப்பட்டு, ட்ரோன்கள் மூலம் ஓநாய்களின் நடமாட்டம் கண்டறிந்து அவற்றை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆபரேஷன் பேடியா தேடுதல் வேட்டையில் ஏற்கனவே 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் ஓரு ஓநாய் நேற்று பிடிபட்டது.