ஊட்டி, செப்.10: ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலைக்காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க ஊட்டி மார்க்கெட்டிற்கு வருகின்றனர். இதேபோல், கிராமப்புறங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ஊட்டி மார்க்கெட்டிற்கு வருகின்றனர்.
இவர்கள் மணி கூண்டு முதல் காபி அவுஸ் வரையுள்ள நடைபாதை வழியாகவே மார்க்கெட்டிற்கு செல்கின்றனர். இந்த நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு குழாய்கள் (தடுப்புகள்) அகற்றப்பட்டுவிட்டன. இதனால், மார்க்கெட்டிற்கு செல்லும் மக்கள் பலரும் இந்த நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே, எதிரே வரும் வாகனங்களை கண்டுக் கொள்ளாமல் சாலைக்கு வருகின்றனர்.
குறிப்பாக, குழந்தைகள் எதிர்பாராதவிதமாக சாலைக்கு வந்து விடுகின்றன. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் மார்க்கெட் நடைபாதை ஓரங்களில் பாதுகாப்பு கருதி இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்று, கமர்சியல் சாலை நடைபாதையிலும் தடுப்புகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.