சேலம்: ‘அதிமுகவை விட்டு யாரும் செல்லவில்லை’ என்று சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் ரெட்டியூர் கண்ணனூர் மாரியம்மன் கோயிலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்று தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டி: ஆதிதிராவிட நல விடுதியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என நான் சுட்டிக்காட்டினேன்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடுதிக்கு சென்று சரி செய்து கொடுக்க வேண்டும். அதிமுக அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போவார் என கூறுவது வதந்தி. அதிமுக என்பது கடல் போன்றது. ஆயிரக்கணக்கானோர் அங்கம் வகிக்கின்றனர். அதிமுக ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. வேண்டும் என்றே சிலர் வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். அதிமுகவை விட்டு யாரும் எங்கும் செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.