சென்னை: விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வையொட்டி டிராக்டர் விபத்து மற்றும் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பலியாகினர். தேனி மாவட்டம், தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 2 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை நேற்றுமுன்தினம் இரவு சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ஆற்றில் கரைத்துவிட்டு டிராக்டரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது லட்சுமிநாயக்கன்பட்டி – தே.சிந்தலைசேரி சாலையில் டிராக்டர் கவிழ்ந்து பள்ளி மாணவர்களான மறவபட்டி கிராமத்தை சேர்ந்த நிவாஸ் (12), கவிகிஷோர் (12) மற்றும் உத்தமபாளையம் பிடிஆர் காலனியைச் சேர்ந்த விஷால் (13) ஆகியோர் டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தேவாரம் போலீசார் கூறுகையில், சிறுவர்கள் டிராக்டரின் டிரைலரில் அமர்ந்து வந்தது உயிரிழப்புக்குக் காரணம் என தெரிவித்தனர்.
இதேபோல சிவகாசி அருகே மம்சாபுரம் கிராமத்தில் விநாயகர் சிலையை கிணற்றில் கரைக்கும்போது, தவறி விழுந்து ஜெகதீஸ்வரன் (10) பரிதாபமாக உயிரிழந்தான். கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் மகன் ஆதி கிருஷ்ணமூர்த்தி (12). 7ம் வகுப்பு மாணவனான இவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆனத்தூர் நத்தம் பகுதியில் உள்ள ராமர்குளத்தில் விநாயகர் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இறந்தார்.