சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திமுக, உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கழகம் காத்த தீரர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி நன்றியின் அடையாளத்தைக் காட்டும் செயலை கலைஞர் 1985ம் ஆண்டு முதல் துவக்கி வைத்தார். பெரியார் – அண்ணா- கலைஞர் பெயரிலான விருதுகள் கழகக் காப்பாளர்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு முதல் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதும், 2018ம் ஆண்டு முதல் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
திமுக தனது 75 ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமர வைத்து-இந்தியாவே போற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது. இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.