தஞ்சை: அதிமுகவில் 2025 டிசம்பருக்குள் நிச்சயம் ஒற்றுமை வரும் என்று அதிமுக உரிமை மீட்புக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். தஞ்சையில் அவர் இன்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இருக்கிற அதிமுக தொண்டர்களில் 99.9 சதவீதம் பேர் அதிமுக ஒன்றிணைய வேண்டும். 2026ல் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக ஜெயலலிதா, எம்ஜிஆரின் ஆன்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எடப்பாடி பழனிசாமி, மற்றவர்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை.
இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாகவே வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை, இரட்டைத் தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும். 2021 தேர்தலில் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றோம். அதற்கு நாம் தனித்து நிற்போம். 150 இடத்துக்கு மேல் வந்துவிடலாம் என்று சொல்லி எல்லோரையும் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். 2025 டிசம்பருக்குள் நிச்சயம் ஒற்றுமை வரும். இவ்வாறு அவர் கூறினார்.