* தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை பொடியாக நறுக்கி, கூட்டு, பொரியல் செய்யலாம். துருவி பச்சடியும் செய்யலாம். அதன் விதைகளைக் காய வைத்து உள்ளிருக்கும் பருப்பை பாயசம், கேசரி போன்றவற்றில் சேர்க்கலாம்.
*அரிசி களைந்த நீரில் இரும்பு கடாய், அரிவாள் மனை, இடியாப்ப அச்சு போன்றவற்றை அடிக்கடி ஊற வைத்து எடுத்தால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
*ஆவக்காய் ஊறுகாய் போடும்போது பாதிக்குப் பாதி கடுகு எண்ணெய் சேர்த்தால் வாசனையாக நீண்ட நாள் கெடாமல் ஃப்ரஷ்ஷாக இருக்கும்.
* மாங்காய் சீவும் போது அதன் தோலை பொடிப் பொடியாக நறுக்கி உளுந்து வடை செய்யும் மாவில் சேர்த்து வடை செய்தால் சுவையாக இருக்கும்.
*ஒரு பாட்டிலில் எண்ணெய் தடவி அதில் சிறிது எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் குலுக்கிக் கொள்ளவும். அதனுடன் தயாராக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைச் சேர்த்து சாலட் செய்தால் ருசியாக இருக்கும்.
*தொக்கு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் போதும்.
*ஃபிரிட்ஜை சுத்தம் செய்யும்ேபாது அதன் தட்டுகளில் பழைய நியூஸ் பேப்பர்களை போட்டு வைக்கவும். ஈரப் பசையை பேப்பர் இழுத்துக் கொள்ளும். சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும். ஃபிரிட்ஜில் வாசனை ஏதும் இருக்காது.
* எந்த ஊறுகாயாக இருந்தாலும் அதில் எண்ணெயைக் காய்ச்சி, ஆறவைத்து பிறகு சேர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் நீண்ட நாட்களுக்கு ஊறுகாய் பஞ்சடையாமல் இருக்கும்.
* ஒரு பாட்டில் ஊறுகாய்க்கு இரண்டு ஸ்பூன் அளவு வினிகரை ஊற்றி வைத்தால் நீண்ட நாட்களுக்கு ஊறுகாய் கெடாமல் இருக்கும். பூஞ்சை பிடிக்காமலும் இருக்கும்.
* சப்பாத்தி மாவில் அதன் அளவிற்கேற்ப அரை அல்லது ஒரு டம்ளர் பால் விட்டுப் பிசைந்து செய்தால் எண்ணெய் இல்லாமலேயே சப்பாத்தி செய்யலாம். மிருதுவாகவும் இருக்கும்.
*குலோப் ஜாமூனை வழக்கம் போல் நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பொடித்து வைத்துக் கொள்ளவும். குலோப் ஜாமூன்களை சூடாக சர்க்கரைப் பொடியில் புரட்டி எடுக்கவும். சுவையான ட்ரை ஜாமூன் தயார்.
* அனைத்து விதமான பொங்கலுக்கும் அரிசி பருப்பை வெறும் கடாயில் வறுத்து செய்தால் பொங்கல் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
– எம்.ஏ. நிவேதா, அமுதா அசோக்ராஜா.