வந்தவாசி: சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாணவன் உட்பட 3 பேர் பலியாயினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமரன் மகன் ஆகாஷ்(22). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வெண்குன்றம் அருகே சென்றபோது, எதிரே வந்தவாசி நோக்கி வந்த பைக் ஆகாஷ் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்குநேர் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
விபத்தில் சிக்கிய மற்றொரு பைக்கில் வந்த இரட்டைவாடை செட்டி தெருவை சேர்ந்த மெக்கானிக் விஜயன்(33), அவருடன் வந்த சென்ட்ரிங் தொழிலாளி சிவா(30) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியிலேயே அடுத்தடுத்து இருவரும் இறந்தனர். இதுகுறித்து வந்தவாசி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.