ஹூஸ்டன்: அமெரிக்காவுக்கு 3 நாள் பயணமாக சென்றடைந்த ராகுல் காந்திக்கு டல்லாசில் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி 3 நாள் தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் டெக்சாசில் உள்ள டல்லாஸ் போர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்தை நேற்று சென்றடைந்தார்.
அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது பேஸ்புக் பதிவில், ‘‘டல்லாசில் புலம்பெயர் இந்தியர்கள், அயலக காங்கிரஸ் நிர்வாகிகளின் அன்பான வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பயணத்தில், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலான பயனுள்ள ஆலோசனைகள், உரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என்றார். நாளை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் ராகுல் பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளார். மேலும், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் உட்பட வாஷிங்டன் மற்றும் டல்லாஸில் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.