சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூரில் செய்தியாளர்களுக்கு கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் பல்வேறு முதலீடுகளை வெளிநாடுகளுக்கு சென்று ஈர்த்துள்ளார். தற்போது அமெரிக்கா சென்று பல முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாமக தலைவர் அன்புமணி மற்றும் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இது மக்களிடம் எடுபடாது. நிறைவேற முடியாத பல கனவுகளுடன் வாழ்பவர்களுக்கு இதுபோன்ற காழ்ப்புணர்ச்சிகள் ஏற்படுகிறது’’ என்றார்.