சென்னை: தருமபுரியில் ரூ.462 கோடியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதிநிலை அறிக்கையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக 6,035 ஏக்கரில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக விருதுநகர், தருமபுரி, தேனி, சிவகங்கை, தூத்துக்குடி (வைப்பார்), ராமநாதபுரம்-1, ராமநாதபுரம்-2 ஆகிய 7 இடங்களில் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
அதனடிப்படையில், முதற்கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் ரூ.462 கோடி செலவில் 1724 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளதாக சிப்காட் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரியில் அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழில் பூங்கா மூலம் 18,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.