புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டி: அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய மகா விஷ்ணு கைது ஏற்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய விவகாரத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் இருக்கக்கூடாது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2ம் தேதி விசிக சார்பில் மாநாடு நடக்கிறது. நாங்கள் திமுக கூட்டணியோடு தான் உள்ளோம். தமிழகத்தில் ஜாதிய பாகுபாடுகள் 99 சதவீதம் இன்னும் அப்படியே தான் உள்ளது. ஒரு சதவீதம் தான் நாம் பேச துவங்கியுள்ளோம். இந்திய அளவில் இந்த விவாதம் விரிவடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.