திருவனந்தபுரம்: பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யவதற்காக கேரள உயர்நீதிமன்றத்தை அணுக போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்த ஒரு நடிகை அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் மீது கொச்சி மரடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இபிகோ 354, 509 மற்றும் 452 ஆகிய பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் முகேஷ் முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம், புகார்தாரரின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் முகேஷின் முன்ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் சிறப்பு விசாரணைக் குழு இறங்கியது. விரைவில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய சிறப்பு விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது. நடிகர் முகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கியதன் மூலம் தொடர் விசாரணை பாதிக்கும் என்றும், புகார் கொடுத்தவர் மீதான நம்பகத்தன்மை மீது சந்தேகம் ஏற்படும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.