திருவள்ளூர், செப். 7: திருவள்ளூர் நகராட்சியில் 24 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் கலெக்டரின் அதிரடி உத்தரவால் அகற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் திருவள்ளூருக்கு வந்து செல்கின்றன. அதேபோல், தனியார் தொழிற்சாலைக்கு செல்லும் பேருந்துகளும் என திருவள்ளூர் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் நகரின் முக்கிய சாலையான ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலையில் அமைக்கப்பட்ட நடைபாதையில், பூ, செருப்பு, ஆடை விற்பனை கடைகள் அமைத்து பொதுமக்கள் யாரும் நடந்து செல்ல முடியாதபடி ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் நடை பாதையில் நடந்து செல்ல வேண்டிய பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் அதிக அளவில் வரும்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதுகுறித்து தொடர்ச்சியாக வந்த புகார் காரணமாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு தலைமையில், நகர அமைப்பு ஆய்வாளர் விஜயா, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது எனவும், மீண்டும் புகார் வந்தால் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். இவ்வாறாக நகராட்சி அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் சி.வி.நாயுடு சாலை, ஜெ.என்.சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த 24 சிறு கடைகளை அதிரடியாக அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.