சென்னை: குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. குணா படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாகவும், குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்கக் கோரியும் கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ரீ ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து, பிரமீடு, எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் பதில் தர கோர்ட் ஆணையிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ,ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் வழக்கறிஞரை நியமித்து, குணா மறு வெளியீட்டின்போது திரையரங்க வசூல் தொகையை வழக்கின் பெயரில் வரவு வைக்க ஆணையிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.