Friday, September 20, 2024
Home » நித்யானந்தா எங்கே? ஐகோர்ட் கேள்வி

நித்யானந்தா எங்கே? ஐகோர்ட் கேள்வி

by Karthik Yash

சென்னை: நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீபோ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீஅருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீபால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இதுசம்பந்தமாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க, தக்கார் நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா சார்பில் அதிகாரம் பெற்ற நித்யா, கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரை ஆஜராக சொல்லுங்கள்’ என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல’ என்றார். இதைக்கேட்ட நீதிபதி, ‘நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரிய வேண்டும். காணொலி காட்சி மூலம் ஆஜராக சொல்லலாம்’ எனத் தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில், ‘அவர் ஆஜராக இயலாது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ‘மடங்களை நிர்வகிக்க தக்கார் நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ‘நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை. அவரது ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

nine + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi