சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு ஈச்சங்காட்டுமேடு பகுதியில் கடந்த சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார்(20) என்கிற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து நேற்று திருத்தணி சிறையில் அடைத்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஈச்சங்காடுமேடு பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை வயல்வெளிக்கு சென்றவர்கள் அப்பகுதியில் ஒருவர் வெட்டி புதைக்கப்பட்டு இருப்பதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கூறினர். போலீசார் கும்மிடிப்பூண்டி தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் மண்ணிவாகத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் கும்மிடிப்பூண்டி நாகராஜ் கண்டிகையை சேர்ந்த அசோக்குமார்(22), சோழவரத்தை சேர்ந்த லெவின் என்கிற பூச்சி(21), தமிழ் என்கிற பிரவீன்குமார் (21), ஜெகநாதன்(22), நெடுவரம்பாக்கத்தை சேர்ந்த ஸ்டீபன்(21), ஈகுவார்பாளையத்தை சேர்ந்த ஞானசேகர் என்கிற மோசஸ்(29) என்பது தெரியவந்தது. கொலையான பிரேம்குமார் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான இரு சிறுமிகளிடம் பழகி வந்துள்ளார். அவர் இரு சிறுமிகளுடன் ஆபாசமாக பேசியதையும் செல்போனில் பதிவு செய்து அவர்களை கடந்த ஒரு வருடமாக மிரட்டி 1.5 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமாரின் மிரட்டல் குறித்து ஒரு சிறுமி 17 வயதான அவரது அக்காவிடம் சொல்லி இருக்கிறார். 17 வயது பெண் இது குறித்து கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகையை சேர்ந்த அவரது இன்ஸ்டகிராம் நண்பரான அசோகுமாரிடம் தெரிவித்துள்ளார். அதன்தொடர்ச்சியாக அசோக்குமார் , பாதிக்கப்பட்ட சிறுமிகள் மூலமாக பிரேம்குமாரை ரெட்ஹில்ஸ் பகுதிக்கு வரவழைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்கி கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. ஆரம்பாக்கம் போலீசார் கைதான 6 பேர்களை திருத்தணி நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இந்த கொலையோடு தொடர்புடையை அந்த 15,17 வயதுடைய 3 சிறுமிகளை போலீசார் விசாரித்து வரும் நிலையில் இவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்….