சென்னை: அண்ணாமலை ஆராய்ச்சி கல்வி படிப்பதை விட அரசியலில் நாகரிகமாக எப்படி பேச வேண்டும் என்று படித்தால் நன்றாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ காட்டமாக கூறினார். இதுதொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டி: போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கைது செய்யப்படும் நிலை உள்ளது. கருத்துரிமை, பேச்சுரிமை இருப்பதற்காக வரம்புமீறும் போது நடவடிக்கை எடுக்கலாம். நடவடிக்கை என்பது வேறு, அடக்குமுறை என்பது வேறு. அரசியலுக்கு அனுபவம்தான் வேண்டும். ஆராய்ச்சி தேவையில்லை.
அண்ணாமலை ஆராய்ச்சி படிப்பை படிப்பதை விட அரசியலில் நாகரிகமாக எப்படி பேச வேண்டும் என்று படிக்க வேண்டும். பண்போடு, நாகரிகத்தோடு பேசுவதற்குரிய மேல்படிப்பை படித்தால் நன்றாக இருக்கும். பாஜவை குழுவை வைத்துதான் நடத்த முடியும் என்ற நிலையை அண்ணாமலை உருவாக்கி விட்டார். அதிமுகவால் வளர்க்கப்பட்டவர் டிடிவி தினகரன். அவர் வாழ்நாளில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றிருக்கக் கூடாது. அதிமுகவின் துரோகி என்ற அடிப்படையில்தான் மக்கள் அவரை புறம்தள்ளினர். இவ்வாறு அவர் கூறினார்.