நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி குட்டியாண்டியூரை சேர்ந்தவர் குமார் (50). இவருக்கு சொந்தமான பைபர் படகில் குமார், நாகப்பட்டினம் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த கந்தன் (51), கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியை சேர்ந்த டேவிட் (43), கூத்தங்குழியை சேர்ந்த சந்தகுரூஷ் (51) ஆகிய 4 பேரும் கடந்த 24ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக ஒரு படகில் வந்த 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களை தாக்கி விட்டு படகில் இருந்த இரண்டு சுசுகி இன்ஜின்கள், ஒரு ஜிபிஎஸ் கருவி, ஒரு மொபைல் போன், மூன்று கேன்களில் இருந்து 110 லிட்டர் பெட்ரோல், ரூ.2 லட்சம் மதிப்புள்ள வலைகளை பறித்து சென்றனர்.