Thursday, September 19, 2024
Home » சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து: கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து: கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி

by MuthuKumar

சென்னை: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனியை சேர்ந்தவர் சங்கர். இவரது நெல்வயலில் இருந்த வைக்கோலை, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பாலநேரி பகுதியை சேர்ந்த ராம் என்பவர், தனது கால்நடை பண்ணைக்காக வாங்கினார். மொத்தம் 178 வைக்கோல் கட்டுகளை நேற்று லாரியில் ஏற்றிக்கொண்டு திருப்பாச்சூரிலிருந்து ஆந்திர மாநிலம் நோக்கி புறப்பட்டார்.

லாரியை, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலநேரி பகுதியை சேர்ந்த ஆரிப் (22) என்பவர் ஓட்டி சென்றார். சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த அபினார் (22) என்பவர் கிளீனராக உடன் சென்றார். திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின் கம்பி மீது வைக்கோல் போர் உரசியது.

இதனால் வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது. இதை அறியாமல் டிரைவர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். லாரியின் மேல் இருந்த வைக்கோல் எரிவதைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் டிரைவரிடம் இதுபற்றி கூறினர். உடனடியாக அவர் லாரியை நிறுத்திவிட்டு, வைக்கோல் மீது கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டார்.

இதனால் எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகள் திருப்பாச்சூர் சாலையில் விழுந்து மளமளவென எரிந்தது. மேலும் இந்த தீயானது வாகனம் முழுவதும் பற்றி அனைத்து வைக்கோல் கட்டுகளும் எரிய தொடங்கியது. இதனல், சாலையில் எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகளை ஆங்காங்கே பிரித்து தள்ளிவிட்ட டிரைவர், சுமார் 500 மீட்டர் தூரம் வரை எரிந்து கொண்டிருந்த லாரியை லாவகமாக ஓட்டிச் சென்று சாலை ஓரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் காலி இடத்தில் நிறுத்தினார்.

சிறிது நேரத்தில், அந்த வைக்கோல் லாரி தீப்பற்றி முற்றிலும் எரிந்தது. இது குறித்து உடனடியாக திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படை துறையினருக்கும், திருவள்ளூர் தாலுகா போலீசருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையில், திருவள்ளூர் மற்றும் பேரம்பாக்கத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தப்பட்டது.

அப்போது ஏற்பட்ட கரும் புகையால் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர். தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அந்த லாரியில் இருந்த 178 வைக்கோல் கட்டுகளும், அந்த லாரியும் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. இந்த சம்பவம் திருப்பாச்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi