Friday, September 20, 2024
Home » சரும அழகுக்கு அரை கைப்பிடி துளசி போதும்!

சரும அழகுக்கு அரை கைப்பிடி துளசி போதும்!

by Porselvi

துளசி உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, முகஅழகையும் மேம்படுத்த உதவுகிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், அதிகப்படியான எண்ணெய்ப் பசை, முகப்பரு போன்ற சருமப் பிரச்னைகளை போக்கி முகப்பொலிவை அதிகரிக்க உதவுகிறது துளசி.

முகப்பரு: துளசியில் இருக்கும் ஆன்டி செப்டிக் தன்மை சருமப் பிரச்னைகளை தடுக்கக் கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசைபோல் அரைக்கவும். அதை முகத்தில் பூசி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.
எண்ணெய்ப்பசை: ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசைபோல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை முகத்தில் பூசி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள அதிகப் படியான எண்ணெய்ப் பசை நீங்கும்.
முகச்சுருக்கம்: ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தை கழுவவும். தினமும் இதுபோல செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.
முகப்பொலிவு: சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாக கொதித்த பின்பு ஆறவைக்கவும். அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து பேஸ் பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி பத்து நிமிடங்களுக்கு பின்பு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்துவருவதால் முகத்தில் பளபளப்பு அதிகரிக்கும்.
கருமை: சிறிதளவு துளசி இலைகளை நன்றாக அரைத்து அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் கலந்து முகத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்த பின் ஈரமான துணியால் மென்மையாக துடைத்து எடுக்கவும். பிறகு சிறு துண்டு பஞ்சை ரோஸ் வாட்டரில் தோய்த்து அதைக்கொண்டு முகத்தை துடைக்கவும். இதுபோல் வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.
வறட்சி: இரண்டு சிட்டிகை துளசிப் பொடியுடன் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.
சருமப் புத்துணர்ச்சி: சிறிதளவு துளசி மற்றும் புதினாவுடன் ரோஸ்வாட்டர் சேர்த்து பசைபோல அரைக்கவும். அதை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பூசி நன்றாக உலர்ந்த பிறகு கழுவவும். இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
– அ.ப. ஜெயபால்

You may also like

Leave a Comment

19 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi