Thursday, September 19, 2024
Home » கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் கருத்துரு :அமைச்சர் எ.வ.வேலு

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் கருத்துரு :அமைச்சர் எ.வ.வேலு

by Porselvi

சென்னை : கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதிவரை உயர்மட்டப் பாலம் குறித்து. முன்னாள் அதிமுக அமைச்சர் திரு.வேலுமணி அவர்களின் உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,”கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்கும் திட்டம் கடித எண்.23504/திட்டம்-1, 2010 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கருத்துரு உருவாக்கப்பட்டது.

பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் ஒப்பனக்கார வீதி சாலைகளில், அதிகப் போக்குவரத்துச் செறிவு(CPU) இருந்ததாலும், உக்கடம் பகுதியில், போக்குவரத்துச் நெரிசல் மிக அதிகமாக இருந்ததாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 14.11.2011இல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில், உயர்மட்டப்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், ஏழு ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2.4.2018 அன்று பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. கோவை மாவட்டத்தில், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டு வந்த திரு.வேலுமணி அவர்கள், 7 ஆண்டுகாலம் கோவை மாவட்ட மக்களின் மீது எவ்வித அக்கரையும் காட்டவில்லை.

10 ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2018-2019 ஆம் நிதியாண்டில், 24.1.2021 அன்று, உயர்மட்டப் பாலத்தினை நீட்டித்து, மீண்டும் பணி துவங்க ஒப்பந்தம் போடப்பட்டது. 7.5.2021 அன்று, திராவிட மாடல் ஆட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கழக ஆட்சிப் பொறுப்பேற்றபோது. 12% சதவீத பாலப்பணிகள் மட்டுமே முடிந்து இருந்தன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் அறிவுறுத்தினார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, பலமுறை கோயம்புத்தூர் தளத்திற்கே சென்று, ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதுடன், பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் எந்தெந்த வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று, அறிவுரைகள் வழங்கி செயல்படுத்தியுள்ளேன். என்னுடைய தொடர் நடவடிக்கையின் காரணமாக 88% சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டது. இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.

சாலையைப் பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுக்களின் கோரிக்கைகளை ஏற்று, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரயத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், 9.8.2024 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த உயர்மட்டப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது குறித்து, தினத்தந்தி, தினமலர், தினகரன், தி இந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, மாலைமலர், மாலைமுரசு, தமிழ்முரசு, தமிழ் இந்து ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் படத்துடனும் பாராட்டியுள்ளதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திரு.வேலுமணி அவர்கள், உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை, பேட்டியாக அளித்துள்ளார்.

தினமலர் தமிழ்ப் பத்திரிகை “நீட்டித்தது இ.பி.எஸ்.“ “நிறைவேற்றியது திரு.மு.க.ஸ்டாலின்“ எனப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது அனைவரும் அறிந்த உண்மையே.“காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்“ என்ற முது மொழிக்கேற்ப, கழக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்தை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.தற்போது, நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி 31.8.2024க்குள் முடிக்கப்படும். இப்பணி விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்பதையும் திரு.வேலுமணி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

three × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi