திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நல்கொண்டா வித்யாநகர் பஸ் நிறுத்தத்தில் நேற்றுமுன்தினம் பஸ்சுக்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக அதிக பயணிகளுடன் அரசு டவுன் பஸ் வந்தது. அதில் ஏராளமானோர் முண்டியடித்து கொண்டு ஏறினர். இதனால் படிக்கட்டில் பயணிகள் தொங்கிய நிலையில் அரசு பஸ்சை அதன் டிரைவர் உடனடியாக எடுத்தார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவர் பஸ் ஏற முயற்சித்தும் முடியாததால் கடும் ஆத்திரமடைந்தார்.
அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மூதாட்டி, பீர்பாட்டிலை எடுத்து பஸ்சின் கண்ணாடி மீது வீசினார். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த பயணிகள் மீது கண்ணாடி நொறுங்கி விழுந்தது. அதை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி ஓடி வந்த பெண் கண்டக்டர், மூதாட்டியை பிடித்து, `ஏன் இப்படி செய்தீர்கள்?’ எனக்கேட்டார்.
அப்போது மூதாட்டி தனது பையில் இருந்து பாம்பை வெளியே எடுத்து கண்டக்டர் மீது வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்டக்டர் மற்றும் சக பயணிகள் அலறியடித்து ஓடினர். அங்கு வந்த போலீசார், மூதாட்டியை பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். பையில் மேலும் 2 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.