புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில், மசோதாவை ஆய்வு செய்வதற்கு மக்களவையை சேர்ந்த 21 எம்பிக்கள்,மாநிலங்களவையின் 10 எம்பிக்கள் அடங்கிய கூட்டு குழு நேற்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பாஜ, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பி.க்கள் இடம் பெற்று உள்ளனர்.
குழுவில் ஜெகதாம்பிகா பால்,தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே,திலீப் சைக்கியா,டி.கே.அருணா(பாஜ),கவுரவ் கோகய்,இம்ரான் மசூத், முகமது ஜாவேத்(காங்.), ஆ.ராசா(திமுக), அசாதுதீன் ஒவைசி(ஏஐஎம்ஐஎம்) உள்ளிட்ட மக்களவை எம்.பி.க்கள் 21 பேரும், எம்.எம்.அப்துல்லா(திமுக) உள்ளிட்ட 10 மாநிலங்களவை எம்.பிக்களும் உள்ளனர். இந்தகுழு மசோ தாவை ஆய்வு செய்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்கும்.