அண்ணாநகர், ஆக.10: தினகரன் செய்தி எதிரொலியாக, மழைநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அதிகாரிகள் வழங்கினர். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் கால்வாய், நீர்வழித்தடங்களை தூர்வாரும் பணிகள் சென்னை முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், ஆபத்தான முறையில் கால்வாயை சுத்தம் செய்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக நேற்று நேரில் ஆய்வு செய்து, மழைநீர் கால்வாய்க்குள் இறங்கி, சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு முகக்கவசம், கையுறை மற்றும் ஜாக்கெட் போன்ற உபகரணங்களை வழங்கினர்.