திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், எனவே புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடுக்கி காங்கிரஸ் எம்பி டீன் குரியாக்கோஸ் சமீபத்தில் கூறினார். முல்லைப் பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என்று கூறியவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்திலும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டபோது அவர் கூறியது: முல்லைப் பெரியாறு அணைக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அது தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால் புதிய அணை என்ற முன்னர் எடுத்த முடிவிலிருந்து கேரளா பின்வாங்காது. உடனடியாக அந்த அணைக்கு ஏதாவது சம்பவித்து விடும் என்று கவலை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.