செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய வளாகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி, அதன்மூலம் அங்கு வரும் மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இவற்றை தவிர்க்க, காவல்நிலையத்தை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, அவற்றை முறையாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி, ஒரு தீவு போல் காட்சியளிக்கிறது.
மேலும், அங்குள்ள பறிமுதல் வாகனங்கள் மற்றும் அதை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் அங்கு வரும் புகார்தாரர்கள் உள்பட அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இக்காவல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது எனக் குறிப்பிடத்தக்கது.எனவே, புதிய செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரை முற்றிலும் அகற்றி, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மழைநீர் தேங்காதவாறு மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணி துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.