*40 டூவீலர்கள் எரிந்து நாசம்
காரியாபட்டி : காரியாபட்டியில் பழைய டூவீலர்கள் விற்கும் கடையில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட டூவீலர்கள் எரிந்து சேதமடைந்தன.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் காரியாபட்டி – கள்ளிக்குடி சாலையில் பழைய டூவீலர்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை 1 மணியளவில் கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காரியாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காரியாபட்டி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதில் 42 டூவீலர்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த டூவீலர்களுக்கான ஆவணங்கள், ரொக்க பணம் ஆகியவையும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா என்பது குறித்து காரியாபட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பழைய டூவீலர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.