சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வக்பு வாரிய சட்ட திருத்தங்களின் மூலம் வாரிய சொத்துகளை தனது சொத்து என்று முடிவெடுக்கிற அதிகாரத்தை பறிக்க முயல்கிறது. வக்பு வாரியத்தில் 2 முஸ்லிம் பெண்களையும், 2 முஸ்லிம் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக நியமிக்க இத்திருத்தம் வகை செய்கிறது. இது அப்பட்டமாக மத சுதந்திரத்தில் தலையிடுகிற செயலாகும்.