மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஓம் சக்தி குரூப் ஆப் கம்பெனி சார்பில், அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மனுக்கு, ரூ.14.50 லட்சம் மதிப்பில் வெள்ளி கவசம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்ற கோயிலாகவும் உள்ளது. இந்த கோயிலில் ஆடிப்பூர விழாவான நேற்று முன்தினம் இரவு இளங்கிளி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், மூலவர் ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து, இளங்கிளி அம்மனுக்கு மேல்மருவத்தூர் ஓம் சக்தி குரூப் ஆப் கம்பெனி சார்பில் அர்ஜுன்-சுவாதி குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்ட ரூ.14.50 லட்சம் மதிப்பில் 16 கிலோ எடை கொண்ட முழு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மேள தாளாங்கள் ஒலிக்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு குங்குமம், வளையல், தாலிக்கயிறு ஆகிய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.