கோவை: கோவை மாவட்டத்திலுள்ள முக்கியமான அணைகளில் ஒன்றான ஆழியாறு அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக ஆழியாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே முழு கொள்ளளவை எட்டியது.
அணையிலிருந்து 11 மதகுகள் வழியாக ஏற்கனவே 5 முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் தற்போது 6வது முறையாக 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.5 என்ற அளவில் உள்ளது.
அணைக்கான நீர்வரத்து 1225 கனஅடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக 1347கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆழியாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் அருகிலுள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் அடித்து செல்லும் பாதைகள் வழியாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.