கேரளா: வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு தகவல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 30ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று 5வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழகத்தில் இருந்து இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்ததில், வயநாட்டில் வசித்த தமிழர்கள் 21 பேர் மற்றும் தமிழகத்தில் இருந்து வேலைக்கு சென்ற 3 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. 25 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 130 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு தகவல் தெரிவித்துள்ளது.