பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (எ) தோல் அஜித் (24). மெட்ரோ ரயிலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் மீது புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20 வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 2 பேர், மதுபோதையில் அஜித்திடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கையில் இருந்த பீர் பாட்டிலால் ஓங்கி தலையில் அடித்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த அஜித்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சிபுக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர்தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நேற்று கைது செய்தனர். நிரஞ்சனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.