திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பெய்த மழையால் பெரும்பாலான பாலங்கள், கால்வாய்கள் நிரம்பி நீர் வெளியேறியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் து.சிற்றரசு அறிவுறுத்தலில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலங்கள் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.அதன்படி திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை மாகரல் மற்றும் பூச்சி அத்திப்பேடு போன்ற பகுதிகளில் உள்ள பாலங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாலும், முள் செடிகள் அதிகளவில் வளர்ந்திருப்பதாலும் மழைநீர் தேங்கி வெளியேறும் சூழ்நிலை இருப்பதால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பணியில் உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜெ.தஸ்ணவிஷ் பெர்ணாண்டோ மேற்பார்வையில் உதவி பொறியாளர்கள் பிரசாந்த், பிரவீன் ஆகியோர் முன்னிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் பாலங்கள் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து கால்வாய் அடைப்புகள், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.