புழல்: புழல் 23வது வார்டில் அகற்றப்பட்ட 3 பொது குடிநீர் குழாய்களை மீண்டும் அமைக்காவிட்டால் வார்டு அலுவலகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மண்டலம் 23வது வார்டு புழல் காந்தி பிரதான சாலை, சிவன் கோவில் அருகே கடந்த ஆண்டு மழை நீர் கால்வாய் பணிகள் நடைபெற்றது. அப்போது கால்வாய் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக 3 குடிநீர் பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பணிகள் முடிந்ததும் நாங்களே புதிதாக 3 பொது குடிநீர் குழாய்களை அமைத்துத் தருவோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அகற்றப்பட்ட குடிநீர் குழாய்கள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்கப்பெறாமல் அப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரை கிலோ மீட்டர் தூரம் சென்று பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் பகுதியில் தினசரி காலை நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் தண்ணீர் பிடிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனிடையே, அகற்றப்பட்ட 3 பொது குடிநீர் குழாய்களை அதே இடத்தில் மீண்டும் அமைக்க வேண்டும், என்று 23வது வார்டு அலுவலத்திலும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலும் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் 23வது வார்டு அலுவலகம் மற்றும் புழல் கன்னட பாளையத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.