காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் முசரவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் எழிலசரன் எம்எல்ஏ பங்கேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி பகுதிகளில், இரண்டாம் கட்டமாக பல்வேறு கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தொடங்கி வைத்து, பல்வேறு துறை சார்ந்த அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர், முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு ஆணை, வீடுகள் பழுது நீக்கும் பணிக்கான பணி ஆணை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் முசரவாக்கம், பெரும்பாக்கம், கிளார், தாமல், முத்துவேடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சார்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், ஒன்றிய செயலாளர் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.