சுல்தான்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தைத்த காலணியை ரூ.10லட்சம் கொடுத்து வாங்குவதற்கு பலர் முன்வந்த நிலையில் அதனை யாருக்கும் விற்கமாட்டேன் என்று செருப்பு தைக்கும் தொழிலாளி மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கடந்த மாதம் 26ம் தேதி உத்தரப்பிரதேசம் சென்றிருந்தார். அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக சுல்தான்பூர் சென்ற ராகுல் சாலையோரத்தில் இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவரிடம் காலணி தைக்க கற்றுக்கொண்ட ராகுல் காலணி ஒன்றையும் தைத்தார். ராகுல் சந்தித்ததால் அந்த தொழிலாளி பிரபலமாகியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ராகுல் தைத்தை அந்த காலணியை பலரும் விலைக்கு கேட்டு வந்துள்ளனர். ஆனால் அந்த தொழிலாளி அதனை எவ்வளவு கொடுத்தாலும் விற்கமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த தொழிலாளி கூறுகையில்,\\” ராகுல் வந்ததால் எனது உலகம் முற்றிலும் மாறிவிட்டது. இதற்கு முன் என்னை யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று பலர் வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். ராகுல் தைத்த காலணியை பலரும் விலைக்கு கேட்கிறார்கள். அதிகபட்சமாக ரூ.10லட்சம் வரை கேட்டனர். ஆனால் நான் அதனை விற்க மாட்டேன் . அது எனக்கு மிகவும் அதிர்ஷ்டமானது\\” என்று தெரிவித்துள்ளார்.