திருமலை: சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக அழைத்து உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் சித்தார்த்வர்மா (30). சினிமாவில் உதவி இயக்குனராக உள்ள இவர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூர் ராகவேந்திரா காலனியில் வசிக்கிறார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், ஐதராபாத்தில் தங்கி வேலை செய்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சித்தார்த்வர்மாவை, தனது தோழி ஒருவர் இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார். முதல் அறிமுகத்தின்போதே, இளம்பெண்ணிடம் பேசிய சித்தார்த்வர்மா, `நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீங்க, சினிமாவுக்கு வந்தா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு’ என ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய இளம்பெண்ணிடம் அவர் செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு அடிக்கடி பேசியுள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு போன் செய்த சித்தார்த்வர்மா, உடனடியாக தனது வீட்டுக்கு வந்தால் போட்டோ செஷன் எடுத்து அவற்றை காண்பித்து சினிமா வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து இளம்பெண், சித்தார்த்வர்மாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு மதுபோதையில் இருந்த அவர், போட்டோ எடுப்பதாக கூறி இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை இளம்பெண் ஏற்க மறுத்தார். இருப்பினும் சித்தார்த்வர்மா, `என்னுடன் அட்ஜஸ்ட் செய்தால் சினிமா வாய்ப்புகள் குவியும்’ என ஆசை வார்த்தை கூறினார். இதனால் சினிமா வாய்ப்புக்காக இளம்பெண் சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி உல்லாமாக இருந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் சினிமா வாய்ப்பு வாங்கித்தராமல் சித்தார்த்வர்மா ஏமாற்றியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் நேற்று கச்சிபவுலி போலீசில் புகார் கொடுத்தார். அதில், சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி நெருங்கி பழகிவிட்டு பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சித்தார்த்வர்மாவை நேற்றிரவு கைது செய்தனர். இதேபோல் அவர் மேலும் பல இளம்பெண்களுக்கு சினிமா ஆசைக்காட்டி போட்டோ செஷன் எடுப்பதாக அழைத்து அட்ஜஸ்ட் மெண்ட் செய்யவேண்டும் எனக்கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அதன்பேரில் அவரது செல்போனில் உள்ள எண்களை வைத்து விசாரித்து வருகின்றனர். யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.