ஆலந்தூர்: சென்னை மூவரசம்பட்டு-மேடவாக்கம் பிரதான சாலை செந்தூரன் காலனியில் கென்னடி’ஸ் சரஸ்வதி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய மருத்துவமனையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். விழாவில், கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழக தலைவர் கே.எல்.அபுல் ஹசன், குடும்ப நலத்துறை முன்னாள் அதிகாரி எ.விஷ்வநாதன், மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
மருத்துவமனை தலைவர் பிரகாஷ் கென்னடி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி வரவேற்று பேசுகையில், ”புழுதிவாக்கம், நங்கநல்லூர் தொடர்ந்து மூவரசம்பட்டில் நவீன மருத்துவ வசதிகளுடன் புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இங்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்” என்றார். விழாவில், மூவரசம்பட்டு ஊராட்சி துணை தலைவர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் பிரசாத், முன்னாள் கவுன்சிலர் உலகநாதன், வார்டு உறுப்பினர்கள் விக்டோரியா, ரெஜிலா கிங்ஸ்லி, சுகுமார், ராஜேந்திரன், சதீஷ் லாவண்யா, சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.