வயநாடு: வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அவ்வனத்திலிருந்த காட்டுயானை ஆற்றில் அடித்து வரப்பட்டு உயிரிழந்தது. கரை ஒதுங்கிய காட்டு யானை உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் காட்டாறுகளில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சூர், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளத்தின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள காட்டாறுகளை யானைகள் கடந்து செல்லும் காட்சிகள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தது.
அந்த வகையில் ஒரு காட்டுயானை உள்வனத்தில் அதிகப்படியான மழை பெய்த காரணத்தால் பாதுகாப்பான இடம் தேடி சாலக்குடி ஆற்றை கடந்து செல்ல முயன்றபோது அந்த யானை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனடிப்படையில் யானையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து உடற்கூறாய்வுக்கு பிறகே தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.