சென்னை: வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ5 கோடி நிதியை அமைச்சர் எ.வ.வேலு, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவில் உயிரிழப்புகள், சொத்துகள் சேதமாகியுள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ப்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். இந்த இயற்கை பேரிடரிலிருந்து மீட்பு மற்றம் நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக கேரள அரசுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ5 கோடியை வழங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்கு துணையாக பணியாற்ற தமிழ்நாட்டில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையிலான மீட்பு குழுவினரை உடனடியாக அனுப்பி வைத்தார். இந்நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று சென்றார். திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நிலவரங்களை கேட்றிந்தார். தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்த ரூ5 கோடிக்கான காசோலையை பினராயி விஜயனிடம் வழங்கினார்.