சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சிஅடைந்தேன். இது அனைவரையும் உலுக்கும் கோரமான நிகழ்வாகும். நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். கேரள அரசுக்கு தமிழக அரசு ரூ5 கோடி நிவாரணத் தொகை வழங்கியிருப்பதை முழு மனதோடு வரவேற்கிறேன். இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட துயரமான நிகழ்வை தேசிய பேரிடராக கருதி ஒன்றிய அரசு அதற்கு தகுந்த நிதி உதவி செய்வதோடு, இந்திய ராணுவத் துணையோடு முழு வீச்சில் தேவையான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
வயநாடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக காங்கிரஸ் சார்பாக 1 கோடி ரூபாய் கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு, ராகுல்காந்தி மூலமாக காசோலையாக வழங்கப்படும். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வயநாடு மாவட்டத்திற்கு அருகில் உள்ள நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், உதகமண்டல எம்எல்ஏ ஆர்.கணேஷ் ஏற்பாட்டில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 80 காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள கோஷி பேபி – 9443063674, அனஸ் எதாலத் – 9486461499 உள்ளிட்டவர்களின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட மீட்புக் குழுவினரோடு தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெறலாம்.