பெங்களூரு: டெல்லியில் ஒன்றிய அமைச்சரும் மஜத மாநில தலைவருமான எச்.டி.குமாரசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ கர்நாடக காங்கிரஸ் அரசு மீதான முறைகேடு புகார் தொடர்பாக பெங்களூரு-மைசூரு வரை பாதயாத்திரை நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தபோது, நாங்கள் தார்மீக ஆதரவு கொடுப்பதாக உறுதியளித்தோம். ஆனால் பெங்களூரு-மைசூரு வரை நடத்தப்படும் பாதயாத்திரையின் பொறுப்பாளராக முன்னாள் ஹாசன் தொகுதி எம்எல்ஏ பிரிதம் கவுடாவை பாஜ தலைமை நியமனம் செய்துள்ளது. எங்கள் குடும்பத்திற்கு எதிராக சதி செய்யும் நோக்கத்தில் பென்டிரைவ் வெளியிட்டவர் பிரிதம்கவுடா. அவரின் சதியால் இன்று எங்கள் குடும்பம் என்னென்ன சோதனைகளை சந்தித்து வருகிறது என்பது மக்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட நபர் தலைமையில் நடக்கும் பாதயாத்திரையில் நாங்கள் பங்கேற்க முடியாது. பாதயாத்திரையில் மஜதவினர் கலந்து கொள்ள மாட்டோம்’ என்றார். மஜதவின் அதிரடி முடிவு பாஜ தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.