சென்னை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் 10 லட்சம் வருகையாளர்களை கடந்துள்ளதை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் 10 லட்சம் வருகையாளர்களை கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது! ‘அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம் போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும் நூலகங்கள் அமையவுள்ளன.
அறிவுத்தாகம் கொண்டோரது தாகத்தை தணித்து, தமிழ்நாட்டில் வாழ்வோரது சிந்தனையையும் வாழ்வையும் இத்தகைய நூலகங்கள் வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளை தொடர்வோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.