டெல்லி: நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 211 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று வயநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, இன்றைய பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை ராகுல் காந்தி வயநாடு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு கண்ணூர் சென்று அங்கிருந்து கார் மூலம் வயநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ராகுலுடன் பிரியங்கா, கே.சி.வேணுகோபால் ஆகிய இருவரும் செல்கின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்.