Friday, September 20, 2024
Home » கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஒருநபர் ஆணைய குழு விசாரணை

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஒருநபர் ஆணைய குழு விசாரணை

by Neethimaan

கள்ளக்குறிச்சி, ஜூலை 31: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பிவைக்கப்பட்டு ஒருநபர் ஆணைய குழு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேற்று மீண்டும் விசாரணை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விஷ சாராயம் குடித்து கடந்த மாதம் 19ம்தேதி 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 67 பேர் உயிரிழந்தனர். அதில் சிகிச்சையில் குணமடைந்து 161 பேர் நலமுடன் வீடு திரும்பினர். மேலும் ஒருவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் பிரபல சாராய வியாபாரிகள் உள்பட 24 பேர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 161 பேரிடம் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணைய குழு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதில் நேற்று முன்தினம் வரை 86 பேர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 40 பேர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டி கடந்த வாரம் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் மூலமாக சம்மன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 8 பேர் ஒருநபர் ஆணைய குழு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் முன்னிலையில் ஆஜர் ஆகினர். அப்போது ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து முதலில் விசாரித்துள்ளார். அதனை தொடர்ந்து குடும்பத்தில் உள்ள நபர்களின் விபரங்கள், பாதிக்கப்பட்ட நபர் தொழில் செய்து வரும் விபரங்களும், சாராயம் குடிக்கும் பழக்கம் எத்தனை ஆண்டுகளாக உள்ளது. மேலும் விஷ சாராயம் யாரிடம் எங்கு வாங்கி குடித்தீர்கள் என்ற விபரங்களையும் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதுவரை 94 பேர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசாரணையானது நேற்று முதல் ஆகஸ்ட் 2ம்தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறும் எனவும், அதில் இன்று (31ம்தேதி) முதல் ஆகஸ்ட் 2ம்தேதி வரை நாள் ஒன்றுக்கு தலா 10 நபர்கள் வீதம் 30 பேர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

three + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi