பூந்தமல்லி: சுங்கச்சாவடி அமைந்திருக்கும் பகுதிகளில் வசிக்கக்கூடிய உள்ளூர் மக்கள் கட்டணமின்றி சுங்கச்சாவடிகளில் பயணம் செய்யலாம் எனவும், உள்ளூர் வாசிகள் ஆதார் கார்டை காண்பித்தால் இலவச பாஸ் பெறலாம் எனவும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சுங்கச்சாவடி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசி அவர்களிடம் ஆதார் கார்டுகளை வாங்கி இலவச பாஸ்க்கு பதிலாக 50 சதவீத சலுகை கட்டணம் என்ற பாஸ் வழங்கினார்கள்.
இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் யுவராஜ் அளித்த பேட்டியில், ஒன்றிய அரசின் போக்குவரத்து துறை மந்திரி கொடுத்த வாக்குறுதி இப்பொழுதுதான் நிறைவேறி உள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆதார் கார்டு காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் என்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்த திட்டம் ஏற்கனவே சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அப்படி இருக்கும்போது இதுவரை நாங்கள் கூடுதலாக கட்டிய பணத்தை திருப்பி தருவார்களா, எம்பிக்களை குஷிபடுத்துவதற்காக சுங்கச்சாவடிகளை எடுத்து விடுவேன் என ஒன்றியய அமைச்சர் அவ்வப்போது கூறி வருகிறார். நாங்கள் தற்போது வாங்கியது போல் பொதுமக்கள் முதலில் சுங்கச்சாவடிகளில் உள்ளூர் பாஸ்களை வாங்கிக் கொள்ளுங்கள். இலவசம் என கூறிவிட்டு 60 கிலோமீட்டர் எல்லைக்குள் செல்வதற்கு 50 சதவீத கட்டண சலுகையில் தற்போது பாஸ் கொடுத்துள்ளனர் என்றார்.