கோவை, ஜூலை 30: கோவை நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (18). இவர் சரோஜினி ரோட்டில் உள்ள டூவீலர் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருக்கும், சிபு (30) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது சிபு தன்னை மிரட்டுவதாக கார்த்திகேயன் தனது நண்பர் ஸ்ரீதரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதர், சிபுவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கார்த்திகேயன் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த சிபு உட்பட 2 பேர் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் பேசி கிரிக்கெட் பேட்டால் தாக்கினர். பின்னர் இருவரும் அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். தாக்குதலில் காயமடைந்த கார்த்திகேயனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கார்த்திகேயனை தாக்கியது சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியை சேர்ந்த சிபு (30), மற்றும் அவரது நண்பர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த ரஷித் (25) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.